Saturday, August 7, 2010

தன்னிலை உணர்தல்

• பிச்சையெடுக்கிறது...மரம் சுமக்கிறது
வித்தை காட்டுகிறது
மண்டியிடுகிறது...ஆசீர்வதிக்கிறது
பழக்க பலதும் செய்கிறது
• சிறு சங்கிலியில் பிணைக்கப்படுகிறது
தார்க்குச்சியால் குத்தப்படுகிறது
அளவுச்சாப்பாடு உருட்டித்தின்கிறது
• தன்னிலை உணர்ந்து ஓர்நாள்
விட்டு விடுதலை ஆகிறது
அடிமைப்படுத்தியவன் சொல்கிறான்,
"அதற்குப் மனநிலை பிறண்டு விட்டது"
-ஜெ.நம்பிராஜன்

Sunday, June 13, 2010

'மெக்காலே' மொழி

பூச்சாண்டி என்றால் என்னவென்றே
தெரிவதில்லை...'மெக்காலே' குழந்தைகளுக்கு
காட்சில்லாவையும் டைனோசரையும்
துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது
சோறு ஊட்ட
-ஜெ.நம்பிராஜன்

Sunday, June 6, 2010

பிள்ளைத்தமிழ்

  • படிக்கும் புத்தகத்தை
    பறித்துக்கொண்டு ஓடுகிறாய்
    புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப்
    படிக்கிறேன்...நான்

  • மாறாத மழலைப்பாடல்களை
    மறந்து மறந்து பாடுகிறாய்
    மறக்காமல் மீண்டு வருகிறது
    எனது பால்யம்
    -ஜெ.நம்பிராஜன்

Sunday, February 8, 2009

இழவு நாடு

  • எல்லா வீடுகளையும்
    போன்றுவிடிவதில்லை
    இழவு வீட்டின் இரவு
  • தூங்கா விழிகளுடன்
    இழப்பின் வலியுடன் கூடிய
    விடியாத இரவு அது
  • பிரிந்த நண்பர்களையும்
    பேசாத சொந்தங்களையும்
    அழைத்து வந்து விடுகிறது
    மிக எளிதாய்...ஒரு மரணம்
  • எல்லோரும் சேர்ந்து
    வழியனுப்புவர் கண்ணீருடன்
    இறந்தவரை
  • இவையெல்லாம் வழக்கமான மரியாதை
    மரிப்பவருக்கு...
    ஆனால்
  • வழியனுப்ப எவருமில்லை
    அழும் உறவுகள் எல்லாம்
    அகதிகளாய் எங்கோ
  • பதுங்கு குழிகளுக்குள்
    பதுங்கியிருக்கிறது
    ஒரு தேசம்
    பாஸ்பரஸ் குண்டுகளுக்கு
    அஞ்சி
  • நித்தம் நூறு சடலங்கள்
    மொத்தமாய்...கொத்துக் கொத்தாய்
    சாவின் குறைந்தபட்ச
    மரியாதையும் அற்று
  • மனிதம் மறந்த மரங்களாய்
    ரத்தத்தின் மிச்சங்கள்
    வேடிக்கை பார்க்கும்
    அண்டை நாட்டில் அமைதியாய்
    -ஜெ.நம்பிராஜன்

Saturday, September 20, 2008

முத்தத்தின் நிறைகுடம் - துளி 2

  • உன் ஒவ்வொரு முத்தமும்
    விருட்சத்தின் விதை
    என்னுள் விழுந்து வளர்ந்து
    ஆயிரம் முத்தங்களாய்ப் பூக்கிறது
  • உன் உதடுகளுக்கு மத்தியில்
    இறுக்கப்பட்டிருக்கிறது
    என் உயிர் மூச்சு
    உன் முத்தத்தால்
    எனக்கு உயிர் கொடு
  • காற்று வெளியில்
    எனக்கான முத்தங்கள் மிதக்கின்றன
    உன் இதழ்களில் உயிர் பெற்று
    என் இதழ்களில் இடம் பெற
  • என் ஒவ்வொரு கவிதையும்
    உன் முத்தத்தில் தொடங்கி
    முத்தத்திலேயே முடிகிறது
  • இந்த பூமியின்
    முதல் முத்தம்
    யார் கொடுத்தது
    ஆதாமா...ஏவாளா?
    -ஜெ.நம்பிராஜன்

Sunday, August 17, 2008

ஊர் கூடி...

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உறுப்புக்கள் சிதறிக் கிடக்க
கேட்பார் எவருமின்றி
கடற்கரையோரம்
அனாதைப் பிணமாய்
பிள்ளையார்...
விநாயகர் சதுர்த்தி
கொண்டாட்டங்களுக்குப் பிறகு
-ஜெ.நம்பிராஜன்

வாய்ப்பு

தயாராகி விட்டார்கள்
சிறுவர்கள் பிச்சையெடுப்பதற்கும்
இளைஞர்கள் வசூல் வேட்டைக்கும்
அரசியல்வாதிகள் சர்ச்சைகளுக்கும்...
விநாயகர் சதுர்த்தி நெருங்குகிறது
-ஜெ.நம்பிராஜன்